மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என்.ரவி!
மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது குறித்து...
மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 12) பதவியேற்றார்.
மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 ஆம் தேதி ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டார். இதற்கென, கடந்த புதன்கிழமை (மார்ச் 11) ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டார்.
இந்த நிலையில், இன்று லோக் பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் மேற்கு வங்கத்தின் 22 வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்.
இந்தப் பதவியேற்பு விழா மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டப்பேரவை சபாநாயகர் பிமன் பானர்ஜி, மூத்த அமைச்சரும் கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கிம் மற்றும் இடதுசாரி முன்னணித் தலைவர் பிமன் போஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜோய் பால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
எதிர்க்கட்சியான பாஜகவிலிருந்து எந்தத் தலைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.