மேற்கு வங்க அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன துறைகள்?
மேற்கு வங்க அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டது குறித்து...
மேற்கு வங்க அமைச்சரவையில் முதல் கட்டமாக ஐந்து அமைச்சர்களுக்கு மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி துறைகளை ஒதுக்கீடு செய்தார்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று, 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை (மே 9) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுவேந்து அதிகாரி முதல்வராகவும் மற்றும் அவருடைய தலைமையிலான பாஜக அரசில் பிற அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சரவை குறித்து வெளியான அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
Advertisement
“மூத்த பாஜக தலைவர் திலீப் கோஷ்-க்கு பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை வள மேம்பாடு மற்றும் வேளாண் சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அக்னிமித்ரா பாலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை மற்றும் நகராட்சி விவகாரங்கள் துறைகளும், அசோக் கீர்த்தனியாவுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவுத் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
க்ஷுதிராம் துடு, பழங்குடியினர் மேம்பாடு, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மதரசா கல்வி ஆகிய துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
நிசித் பிரமாணிக், வட வங்க வளர்ச்சித் துறை, இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய துறைகளில் பொறுப்பு வகிப்பார்.
மீதமுள்ள துறைகளை முதல்வர் சுவேந்து அதிகாரி கவனித்துக் கொள்வார்” என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.