மேற்கு வங்க பள்ளிகளில் கடவுள் வாழ்த்தாக வந்தே மாதரம் - முதல்வர்!
மேற்கு வங்க பள்ளிகளில் நாள்தோறும் காலையில் வந்தே மாதரம் பாடப்படுவதைக் கட்டாயமாக்க பள்ளிகளுக்கு புதிய பாஜக அரசு உத்தரவு பிறப்பித்தது குறித்து...
மேற்கு வங்க பள்ளிகளில் நாள்தோறும் காலையில் வந்தே மாதரம் பாடப்படுவதைக் கட்டாயமாக்க பள்ளிகளுக்கு அம்மாநிலத்தில் புதிதாகப் பதவியேற்றிருக்கும் பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி நிறுவனத் தலைவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, “வரும் திங்கள்கிழமைமுதல் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடல் கடவுள் வாழ்த்தாக அறிமுகப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
Advertisement
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மே 13 ஆம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “காலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பான காலை வணக்க வழிபாட்டின் போது, வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களும் உடனடியாக வந்தே மாதரம் பாடுவதை உறுதிசெய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் வந்தே மாதரம் பாடுவதைக் காணொளியாகப் பதிவு செய்து அதை ஆதாரமாக பள்ளிக்கல்வித்துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பங்ளார் மாட்டி பங்ளார் ஜொல் (வங்காள மண்ணே, வங்காள நீரே) என்னும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல் மமதா பானர்ஜி அரசால் அனைத்துப் பள்ளிகளிலும் காலை வழிபாட்டில் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அரசு அமைந்ததும் ’வந்தே மாதரம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘ஜன கண மன’ என்னும் தேசிய கீதம் அனைத்து காலக்கட்டத்திலும் மாற்றமில்லாமல், தினசரி வழிபாட்டின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.