தேர்தலில் எனது மகன் போட்டியிடவில்லை: கே.வி.தங்கபாலு திட்டவட்டம்
வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது மகன் போட்டியிடவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு கூறியது குறித்து...
சென்னை: வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது மகன் போட்டியிடவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு திட்டவட்டமாக தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீரர் தீரர் சத்தியமூர்த்தியின் 84 ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கும் அலுவலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சிலைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு தலைமையில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர்கள் சொர்ணா சேதுராமன், அழகு ஜெயபால், மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாவட்ட தலைவர்கள் கராத்தே செல்வம், திலகர், மாநில பொதுச் செயலாளர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய கே. வி. தங்கபாலு, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 18 தொகுதிகளில் 16 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டது. 7 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது, 5 தொகுதிகளுக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் தேர்வில் எவ்வித வெளிப்படை தன்மையும் இல்லை என கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்திருந்தது குறித்த கேள்விக்கு, உள்கட்சி விவகாரங்களை பொது வெளியில் நான் பேசுவது கிடையாது. உள் அரங்கத்தில் பேச வேண்டிய விவகாரத்தை ஜனநாயக முறையில் பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆகவே நண்பர்கள் தேர்தல் நேரத்தில் பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
மேலும், ஜி.கே வாசன் காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு பல பதவி சுகங்களை அனுபவித்தவர். இப்போது பாஜக பக்கம் சென்று விட்டார். அவரிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்.
இந்த தேர்தலில் எனது மகன் போட்டியில்லை என அவர் கூறினார்.