விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க பொறுப்பு ஆளுநர் அழைக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்துள்ளது தொடர்பாக...
சென்னை: தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க பொறுப்பு ஆளுநர் அழைக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 'தொங்கு சட்டப்பேரவை' என்ற நிலை உருவாகியுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றுள்ள கட்சிக்குத்தான் ஆட்சி அமைப்பதற்கான முதல் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. எனவே, தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க பொறுப்பு ஆளுநர் அழைக்க வேண்டும் என்று சிபிஎம் தமிழக மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
"அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தவெக-வைத்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் இது போன்றதொரு சூழலை நாம் இதற்கு முன் கண்டதில்லை; தற்போது ஒரு தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. அதிக இடங்களை வென்று முன்னிலையில் இருப்பதால், விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டிய கடமை ஆளுநருக்கே உள்ளது," என்று சண்முகம் கூறினார்.
Advertisement
இந்த விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டை விமர்சித்த அவர், "உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்று இருப்பதாக ஆளுநர் தற்போது கூறுவது சரியல்ல," என்று தெரிவித்தார்.
விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து சிபிஎம் விரைவில் ஒரு முறையான முடிவை எடுக்கும் என்று சண்முகம் மேலும் கூறினார்.
மேலும், "திமுகவுக்கும் எங்களுக்கும் இடையிலான நல்லுறவைக் கருத்தில் கொண்டு நாங்கள் ஸ்டாலினைச் சந்தித்தோம்; தற்போதைய தேர்தல் நிலவரம் குறித்து அவரிடம் பேசினோம். ஆட்சி அமைப்பதற்கு தவெக-வை மட்டுமே ஆளுநர் அழைக்க வேண்டும் என்றும், விஜய் முதல்வராகப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் வலியுறுத்தினோம்," என்று சண்முகம் கூறினார்.
தமிழக சட்டப்பரேவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஏற்பட்ட 'தொங்கு சட்டப்பேரவை' என்ற தீர்ப்பைத் தொடர்ந்து, தீவிரமான அரசியல் ஆலோசனைகள் நடைபெற்று வரும் சூழலில் சண்முகத்தின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.