ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகை: காங்கிரஸ் கடும் கண்டனம்
விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால், ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால், ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்தி, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், அதிகப்படியான தொகுதிகளில் வெற்றிபெற்று மக்களின் தெளிவான ஆதரவை பெற்றுள்ளது. மேலும் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கமும் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவை அதிகாரபூர்வமாக வழங்கியுள்ளது.
இந்நிலையில், பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள கூட்டணியை, ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காதது தமிழக மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
Advertisement
இந்த ஜனநாயக விரோத தாமதத்திற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் செயல்பட்டு வருகிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இதனை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பை மதித்து, பெரும்பான்மை ஆதரவை கொண்ட கூட்டணியை உடனடியாக ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய ஜனநாயக போராட்டம் நடத்தப்படும்" என்று கூறியுள்ளனர்.