தயாரியுங்கள்... தொழில்முனைவோராகுங்கள்!
200 கிராம் எடை கொண்ட சலவை சோப் கட்டி ஒன்று ரூ.12 எம்.ஆர்.பி. விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக விற்பனை செய்தால் 10 சதவீதம் வரையில் இலாபம் பார்க்கலாம்
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு எப்போதும் சந்தையில் தேவை அதிகரித்து கொண்டே தான் இருக்கும். துணிகளைத் துவைக்க பயன்படுத்தப்படும் சலவை சோப்புகளுக்கும், சோப் தூளுக்கும், பாத்திரங்கள் கழுவப் பயன்படும் சோப் தூளுக்கும் எப்பொழுதும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. சலவை சோப், சோப் தூள், பாத்திரங்களைக் கழுவப் பயன்படும் தூள் ஆகியவற்றைத் தயாரித்து, விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கினால், நல்ல வாய்ப்பு உள்ளது.
சலவை சோப் கட்டியைத் தயாரிக்க 3 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் அதற்கு தேவையான மூலப் பொருட்களை கலக்கும் இயந்திரம். அடுத்ததாக அவற்றைக் கட்டியாக மாற்றி வெளியே தள்ளும் இயந்திரம். இறுதியாக அதை வெட்டி அதனுடைய வடிவமைப்பைச் சரி செய்யும் இயந்திரம் என மூன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய இயந்திரங்கள் தமிழகத்தில் கோவை, மதுரை, வெள்ளக்கோயில் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயந்திரங்களை வாங்க குறைந்தபட்சமாக ரூ.3 இலட்சம் தேவைப்படுகிறது. மேலும் அதற்கு தேவையான மூலப்பொருட்கள், நடைமுறை மூலதனம் என ரூ.5 இலட்ச ரூபாய் இருந்தால் அந்தத் தொழிலை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து நடத்திச் செல்லலாம். அந்த இயந்திரங்களை இயக்க 8 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும்.
ஒரு நாளைக்கு அதாவது 8 மணி நேரத்தில் குறைந்த பட்சமாக 500 கிலோ வரையில் சலவை சோப் கட்டிகளைத் தயாரிக்கலாம். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ சோப் தயாரிக்கலாம்.
Advertisement
சலவை சோப் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் இராஜபாளையம், சேலம், சென்னை, புதுவை உள்ளிட்ட ஊர்களில் கிடைக்கின்றன.
200 கிராம் எடை கொண்ட சலவை சோப் கட்டி ஒன்று ரூ.12 எம்.ஆர்.பி. விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக விற்பனை செய்தால் 10 சதவீதம் வரையில் இலாபம் பார்க்கலாம். அதையே நேரடியாக சில்லரையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் 20 சதவீதம் வரையில் இலாபம் பார்க்கலாம்.
பாத்திரம் கழுவும் சோப் தூள் தயாரிக்க கலக்கும் இயந்திரம், ஜல்லடை ஆகியவை தேவை. அத்தகைய இயந்திரம் 50 கிலோ கொள்ளளவு திறன், 30 கிலோ கொள்ளளவு திறன் கொண்ட இயந்திரம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 200 கிலோ வீதம் 8 மணி நேரத்திற்கு 1600 கிலோ சோப் தூள் தயாரிக்கலாம். இயந்திரம், மூலப்பொருட்கள், நடைமுறை மூலதனம் உள்பட குறைந்த பட்சம் ரூ.2 இலட்சம் இருந்தால் பாத்திரம் கழுவும் சோப் தூள் தயாரிக்கும் தொழில் தொடங்கலாம்.
அதே போல துணி சலவைக்குப் பயன்படுத்தும் சோப் தூள் தயாரிக்க கூடுதலாக டிரையர் எனப்படும் சோப் தூளைக் காய வைக்கும் இயந்திரம் தேவைப்படும். பாத்திரம் கழுவும் சோப்பு தூள் மற்றும் சலவை சோப்பு தூள் ஆகியவற்றைத் தயாரிக்க ரூ.3 இலட்சம் மூலதனம் இருந்தால் தொழிலைத் தொடங்கிவிடலாம்.
தற்போது சலவை சோப் தூளுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் திரவ சலவை சோப்பை ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 500 லிட்டர் வரையில் தயாரிக்கலாம். இதற்கு குறைந்த பட்சம் ரூபாய் ஒரு இலட்சம் மூலதனம் இருந்தால் போதுமானது.
தினந்தோறும் தேவைப்படும் சலவை சோப், சலவைத் தூள், திரவ சோப் ஆகியவற்றைத் தயாரிக்க குறுகிய கால பயிற்சிகள், தனியார் மற்றும் அரசு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அப்பயிற்சியைப் பெற்றோ அல்லது அனுபவம்மிக்கவர்களிடமிருந்து செய்முறையைக் கற்றோ தொழிலைத் தொடங்கலாம்.