பாகுபலியை அடுத்து பிரபாஸின் 19 வது படமான சாஹூவின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் பாகுபலி 1 & 2 மூலம் பிரபாஸ் சம்பாதித்த திரைப்பட வெற்றிகளுக்கு சற்றும் பங்கம் வரக்கூடாது எனும் தீவிரமான மன உறுதியின் கீழ் திட்டமிட்டு எடுக்கப்படவிருப்பதால் அடுத்தாண்டு இறுதி வரை படப்பிடிப்பு நீளும் எனக் கருதப்படுகிறது. ஹாலிவுட் சூப்பர் மேன் திரைப்படங்களுக்கு இணையாக சாஹூவில் துல்லியமான திரைப்படத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளனவாம். 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் ஆக்ஷன் திரில்லர் வகைப் படமாக அமையும் எனக் கருதப் படுகிறது. 19 வது படத்திற்கான படப்பிடிப்புகளே இன்னமும் முழு வீச்சில் தொடங்கப் படாத நிலையில் பிரபாஸின் 20 திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜில் திரைப்படப் புகழ் இயக்குனர் ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் தனது முந்தைய ரொமாண்டிக் திரைப்படங்களான டார்லிங், மிர்ச்சி ஜேனரில் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ‘ஜில்’ இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாகுபலியை அடுத்து சஹூவிலும் ஆக்ஷனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதால் ‘ஜில்’ ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பழைய லவ்வர் பாய் பிரபாஸைக் காணலாம் என்று இயக்குனர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ராதா கிருஷ்ணகுமாரின் திரைப்படங்கள் அவரது அருமையான விஷுவல்கள் மற்றும் நளினமான நடன அசைவுகளுக்காக ரசிகர்களால் பெரிதும் பாரட்டப்படக் கூடியவை. இந்தத் திரைப்படத்துக்கான தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களில் எது முன்னதாக திரைக்கு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.