முகப்பு
மதுரை

அழகர்கோவில் மலையில் பக்தர்களை தாக்கியதாக 55 பேர் மீது வழக்கு

அழகர்கோவில் மலையடிவாரத்திலுள்ள சித்தருவி வெள்ளிமலையாண்டி கோவிலில் ஆந்திர மாநில பக்தர்கள் 10 பேர்

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 11:44 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

அழகர்கோவில் மலையடிவாரத்திலுள்ள சித்தருவி வெள்ளிமலையாண்டி கோவிலில் ஆந்திர மாநில பக்தர்கள் 10 பேர் பெüர்ணமி பூஜையின்போது தாக்கப்பட்டதாக வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி கிராமங்களை சேர்ந்த 55 பேர் மீது மேலவளவு போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவுசெய்தனர்.

  ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சுவாமி மேலவளவு போலீஸில் அளித்துள்ள புகாரில், நாங்கள் கும்பகோணம் அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் வழிபட்டோம். அப்போது அழகர்கோவில் வெள்ளிமலையாண்டி கோவிலில் பரிகார பூஜை செய்யுமாறு கூறினர்.

  அதனால் பெüர்ணமி பூஜை செய்தோம். அப்போது சிலர் எங்களைத் தடுத்து தாக்கினர். காரையும் அடித்து சேதப்படுத்தினர். பொருள்களை எடுத்துச் சென்றுவிட்டனர்.

Advertisement

 எங்களுடன் வந்திருந்த கேசவ் (40), ரேவந்த் (14), சிவாமா, வேணு (31), பிரவீன்குமார் (38), ஸ்ரீராமுலு, ராஜூ (30), சந்திரபிரகாஷ் (32), வெங்கடாச்சாரி, சோமசுந்தரம் (38) ஆகியோர் காயமடைந்துள்ளனர் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பேரில், சத்தியமூர்த்தி, பெரியபுலியன், செந்தில், மாயாண்டி, சசிகுமார் உள்ளிட்ட 55 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், ஏ.வல்லாளபட்டி கிராமப் பொதுமக்கள் வெள்ளிமலையாண்டி கோவிலில் திரண்டனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:

  வெளி மாநிலத்தை சேர்ந்த 10 பேர் எங்கள் கோவில் பூஜாரி இல்லாமல் அவர்களாகவே கோவிலில் வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கி உள்ளனர். பின்னர் இரவு 7 மணிக்கு மேல் சிலர் பூஜை நடத்தியுள்ளனர். அங்கு கடவுளாக வழிபடப்படும் வேல்களை கடப்பாரையால் பிடுங்கி எடுத்தனர்.

  இதைப் பார்த்த சிலர் கிராமத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்றவர்களை அவர்கள் தாக்கியதால் கைகலப்பு ஏற்பட்டது.

  பின்னர் நாங்கள் மேலவளவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து, 10 பேரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தோம். இந்த நிலையில், அவர்களிடம் போலீஸார் புகார்பெற்று, நாங்கள் அவர்களைத் தாக்கி நகை, பணம் போன்றவற்றை பறித்துக் கொண்டதாக பொய்யாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் நியாயம்கேட்டு எஸ்.பி., ஆட்சியரிடம் மனு அளிக்கச் செல்வதாகத் தெரிவித்தனர்.

  பின்னர், மதுரையில் எஸ்.பி, மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வாகனங்களில் ஏராளமானோர் (படம்) மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.