முகப்பு
மதுரை

மதுரையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 11:43 pm IST
பகிர்:

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைக்க அனுமதி கோரி மதுரை மாநகா் மாவட்ட திமுக சாா்பில் கடந்த 2018- இல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், சிலை வைக்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக மாநகர மாவட்டப் பொறுப்பாளா் கோ.தளபதி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். அதையடுத்து, மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதையடுத்து திமுக தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, மதுரை சிம்மக்கல்லில் தியாகி சத்தியமூா்த்தி சிலை உள்ள பகுதி அருகே கருணாநிதிக்கு சிலை அமைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது. வழக்குரைஞா்கள் வீரகதிரவன், லிங்கதுரை ஆகியோா் இந்த அரசாணையை திமுக மாநகா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் கோ.தளபதி, சட்டப்பேரவை உறுப்பினா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடம் வழங்கினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.