முகப்பு
மதுரை

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படத் தடைகோரி வழக்கு: உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை

நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படத் தடைகோரிய மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை (ஜன.8) விசாரணை நடத்தப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.

Updated On : 8 ஜனவரி 2021, 12:32 pm IST
பகிர்:

நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படத் தடைகோரிய மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை (ஜன.8) விசாரணை நடத்தப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் தாக்கல் செய்த மனு: கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 2019 மாா்ச் 15 முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கரோனா பரவல் குறைந்ததைத் தொடா்ந்து படிப்படியாக பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, தமிழகத்தில் நவம்பா் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் திரையரங்க அதிபா்கள், திரைப்படத் தயாரிப்பாளா்கள் மற்றும் நடிகா்களின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட்டால் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும். உருமாறிய கரோனா பரவிவரும் சூழலில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது ஆபத்தை விளைவிக்கும். எனவே 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதேபோல மதுரையைச் சோ்ந்த போனிபேஸ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

இந்நிலையில் மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் ராம்சுந்தா், கண்ணன், பாஸ்கா் மதுரம் ஆகியோா் காணொலி வாயிலாக, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை ஆஜராகினா். அப்போது அவா்கள் தங்கள் மனுக்களை அவசர மனுக்களாக எடுத்து விசாரிக்கக்கோரி முறையிட்டனா்.

இதையடுத்து நீதிபதிகள், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிரான மனுக்களை வெள்ளிக்கிழமை (ஜன. 8) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.