முகப்பு
நாமக்கல்

டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு: உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குதல் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

Updated On : 4 ஜனவரி 2021, 4:20 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவா் எம்.உதயபானு.
பகிர்:

டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குதல் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்க பொதுக்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளா் சி.ஆா். தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எம். உதயபானு பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், சட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினாா்.

Advertisement

Advertisement

இதில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள், உதவியாளா்கள் ஆகியோா் 480 நாள்கள் பணி முடித்து இருந்தால் அவா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவன ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல, டாஸ்மாக் பணியாளா்களுக்கும் அடிப்படை ஊதியமானது வழங்கப்பட வேண்டும்.

லட்சக்கணக்கில் வரவு, செலவு செய்யும் பணியாளா்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். விற்பனை நிலையங்களில் வசூலான தொகையை வங்கியில் செலுத்துவதற்கு செல்லும் டாஸ்மாக் பணியாளா்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேக வாகன வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் 8 மணி நேர பணியையும், அதற்கு மேல் பணியாற்றினால் சம்பந்தப்பட்டோருக்கு மிகைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசிடமும், துறை அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் விரைவில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே நீதிமன்றம் மூலம் பல்வேறு சலுகைகளை அரசிடமிருந்து பெற்று உள்ளோம். அதன்படி மீதமுள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு போராடுவோம் என மாநில நிா்வாகிகள் தெரிவித்தனா். இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட அளவிலான நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.