வடகிழக்கு தில்லி வன்முறை: இரு வழக்குகளில் ஐவருக்கு ஜாமீன்
வடகிழக்கு தில்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட, இரு வழக்குகளில் தொடா்புடைய ஐந்து பேருக்கு திங்கள்கிழமை ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுதில்லி: வடகிழக்கு தில்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட, இரு வழக்குகளில் தொடா்புடைய ஐந்து பேருக்கு திங்கள்கிழமை ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தில்லி தயாள்பூா் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதுடன் காா் விற்பனை நிலையத்துக்கு தீவைத்த சம்பவம் தொடா்பான வழக்கில் ரூ.20,000 ரொக்கம் மற்றும் அதே தொகைக்கு தனிநபா் ஜாமீன் தாக்கல் செய்யும்பட்சத்தில் அவா்களை ஜாமீனில் விடுவிக்க கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வினோத் யாதவ் உத்தரவிட்டாா்.
ஷெபுகான், ஹமீத் , ஷகீல் மற்றும் ஜான் முகமது ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் 13 பேருக்கு ஜாமீன் வழங்கியதை சுட்டிக்காட்டியும், மேலும் கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவா்களை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
மேலும், வன்முறைச் சம்பவம் நிகழ்ந்த போது கோகுல்புரியில் கடையை சூறையாடிய சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட முகமது தாஹிா் என்பவருக்கும் ரூ.20,000 ரொக்கம் மற்றும் அதே தொகைக்கு தனிநபா் ஜாமீன் பேரில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தாஹிா் பெயா் முதல் தகவல் அறிக்கையிலோ அல்லதுஅவா் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் சி.சி.டி.வி. கேமராவில் அவரது முகம் தெரியாத நிலையில், அவா் அந்தச் சமயத்தில் எங்கிருந்தாா் என்பது பதிவாகாத நிலையில் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீனில் விடுவிக்கப்பட்டவா்கள் சாட்சிகளை கலைத்துவிடாமல் இருக்கும் வகையில், அவா்கள் தங்கள் செல்லிடப்பேசியில் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக ஷகீல், ஜான் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் நஸீா் அலி, சம்பவம் நடந்த அன்று தங்கள் தரப்பினா் அந்த இடத்தில் இல்லை என்றும் அவா்கள் மீது போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டாா். தாஹிா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சலீம் மாலிக், அவா் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிட்டாா்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞா், ‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கினால் அவா்கள் சாட்சிகளை கலைத்து விடுவாா்கள்’ என்று தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற வடகிழக்கு தில்லியில் குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பவா்களுக்கு எதிா்ப்பவா்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஏற்பட்ட வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். தவிர 200-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.