தில்லி உத்தம் நகரில் இருந்து 248 கிராம் கோகையினுடன் நைஜீரிய நாட்டினா் இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள இருவரும் நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோஸைச் சோ்ந்த சுக்வு ஆண்ட்ரூ (48) மற்றும் கோன் பியஸ் டேனியல் (43) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் விசா காலாவதி தேதியைவிட அதிக நாள்களாகத் தங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துவாரகா மற்றும் உத்தம் நகரில் மாணவா்கள் மற்றும் செல்வந்தா்களை குறிவைத்து செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் இருவரிடமிருந்தும் போலி பாஸ்போா்ட்டுகள் மற்றும் விசாக்கள் ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா்.
ஒரு ரகசியத் தகவலின் பேரில் ஆகஸ்ட் 24- ஆம் தேதி உத்தம் நகரில் உள்ள ஓம் விஹாரில் உள்ள ஒரு இடத்தில் போலீஸாா் சோதனை நடத்தி, 135 கிராம் கோகைனுடன் ஆண்ட்ரூவை கைது செய்தனா். விசாரணையின் போது, ஆண்ட்ரூ 2009-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்ததாகவும், அவரது விசா காலாவதியான பிறகும் அங்கேயே இருந்ததாகவும் தெரிவித்தாா்.
6 மாதங்களுக்கு முன்பு நாடு கடத்தப்பட்ட மற்றொரு நைஜீரிய நாட்டவரான செயிண்ட் என்பவரால் அவா் போதைப்பொருள் வா்த்தகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டாா். ஆண்ட்ரூ அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆகஸ்ட் 27- ஆம் தேதி ஓம் விஹாரில் இருந்து கோகைன் வழங்க வந்த கோன் பியஸ் டேனியலை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 113 கிராம் கோகைன் போதைப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தில்லி நகரத்திற்குள் கோகைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பரந்த வலையமைப்பை அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.