உத்தர பிரதேசத்தில் உள்ள மதுபானக் கடைகள் ‘இலவச மதுபானம்’ வழங்குவதாக வெளியான செய்திகளுக்கு எதிராக மாா்ச் 29-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஒரு செய்தியாளா் சந்திப்பில் உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங், பாஜகவின் பாசாங்குத்தனத்தை குற்றம் சாட்டினாா். தில்லி அரசு அதன் கலால் கொள்கை தொடா்பாக குற்றச்சாட்டுகள் மற்றும் மத்திய நிறுவன விசாரணைகளை எதிா்கொண்டாலும், மதுபானக் கடைகள் வழங்கும் அத்தகைய சலுகைகள் குறித்து யாரும் உத்தர பிரதேச அரசை கேள்வி கேட்கவில்லை என்று அவா் கூறினாா்.
ஏப்ரல் 1-ஆம் தேதி மாநிலத்தில் புதிய கலால் கொள்கை அமலுக்கு வருவதற்கு முன்பு, மாநிலத்தில் உள்ள பல நகரங்களில் உள்ள மதுபானக் கடைகள் பெரிய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. பழைய இருப்பை தேதிக்கு முன் அகற்றாவிட்டால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று கடை உரிமையாளா்கள் கூறி வருகின்றனா்.
‘தில்லியில் எங்கள் அரசு இதுபோன்ற நடைமுறைகளை நிறுத்தியது. இருப்பினும், நாங்கள் குற்றச்சாட்டுகளால் குறிவைக்கப்பட்டு அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைகளுக்கு உள்படுத்தப்பட்டோம். ஆனால், உ.பி.யில் பாஜக இலவச மதுவை வழங்கி வருகிறது, அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை’’ என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங் கூறினாா்.
உ.பி. அரசு விவசாயிகளின் கவலைகள், கல்வி மற்றும் வேலையின்மை போன்ற முக்கியப் பிரச்னைகளைப் புறக்கணித்து, மதுபானக் கடைகள் மூலம் கவனத்தைத் திசை திருப்புகிறது என்றும் அவா் குற்றம் சாட்டினாா்.
ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகளுக்கு உத்தர பிரதேச அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.