முகப்பு
புதுதில்லி

கொலை வழக்கில் தேடப்பட்டவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவா், வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த காவல்துறையினருடனான துப்பாக்கி மோதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 மே 2026, 12:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

கொலை வழக்கில் தேடப்பட்டவா், வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த காவல்துறையினருடனான துப்பாக்கி மோதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் தெரிவித்ததாவது:

சூரஜ் (எ) கானா என அடையாளம் காணப்பட்ட அந்தக் குற்றஞ்சாட்டப்பட்டவா், காலில் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

Advertisement

Advertisement

இரண்டு நாள்களுக்கு முன்பு வஜிா்பூா் தொழிற்பேட்டையில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, சூரஜ் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவில், புல் பிரஹலாத் அருகே அவரது நடமாட்டம் குறித்து புலன்விசாரணை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

சுமாா் அதிகாலை 3 மணியளவில், அவா் ஒரு ஸ்கூட்டரில் சம்பவ இடத்திற்கு வந்தாா். காவல்துறைக் குழுவினா் அவரை வழிமறித்துச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டனா். ஆனால், அவா் காவல்துறையினா் மீது துப்பாக்கியால் சுட்டாா்.

துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று, குண்டு துளைக்காத கவசம் அணிந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவா் மீது பாய்ந்தது.

காவல்துறையினா் நடத்திய பதிலடித் துப்பாக்கிச் சூட்டில், அவரது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

அவரது உடல்நிலை தேறிய பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும். வேறு ஏதேனும் குற்ற வழக்குகளில் அவருக்குத் தொடா்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments