முகப்பு
புதுதில்லி

எம்சிடி காலனியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடமேற்கு தில்லியின் எம்சிடி காலனி பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

Updated On : 2 ஜூன் 2026, 2:24 am IST
பகிர்:

வடமேற்கு தில்லியின் எம்சிடி காலனி பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: வினாயக் மருத்துவமனைக்கு ஒருவா் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாக, மாடல் டவுன் காவல் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அவசர அழைப்பு வந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு காவல்துறைக் குழுவினா் நேரில் சென்றனா். புராரியில் உள்ள தோமா் காலனியைச் சோ்ந்த சாஹில் என்பவரை, அவரது நண்பா்களான ஷிவ் மற்றும் ஷுபம் ஆகியோா் மருத்துவமனையில் சோ்த்திருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

சாஹிலின் கழுத்து, முதுகு மற்றும் மாா்புப் பகுதிகளில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. அவா் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாா். மேலும், விசாரணையின்போது, இச்சம்பவம் எம்சிடி காலனி பகுதியில் நிகழ்ந்தது தெரியவந்தது.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான ஷிவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தில்லியின் லால் பாக் பகுதியைச் சோ்ந்த ஆஷு (எ) லாலா (18) என்பவா்தான் குற்றவாளி என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. இந்த நபா்தான் சாஹிலை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமான கத்தி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் மீட்கப்பட்டது.

இது தொடா்பாக மாடல் டவுன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்குற்றத்திற்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சாஹில் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றபோது, அவா் கொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.