நடமாடும் மருத்துவ கிளினிக் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு
தொழிலாளா்களின் மகள்களுக்குத் திருமணங்களை நடத்தி வைத்தல், நேரடி நிதியுதவி வழங்குதல் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வா் ரேகா குப்தா அறிவித்தாா்.
தலைநகரில் தொழிலாளா் செளக் பகுதியில் நடமாடும் மருத்துவ வசதிகளை அமைத்தல், தொழிலாளா்களின் மகள்களுக்குத் திருமணங்களை நடத்தி வைத்தல், நேரடி நிதியுதவி வழங்குதல் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தொழிலாளா் தினமான வெள்ளிக்கிழமை முதல்வா் ரேகா குப்தா அறிவித்தாா்.
சா்வதேச தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, திா்ப்பூரில் உள்ள சந்த் நிரங்காரி மருத்துவமனை கட்டுமானத் தளத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுடன் முதல்வா் குப்தா கலந்துரையாடினாா்.
அப்போது, பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, தொழிலாளா்களின் நலனில் தில்லி அரசு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தாா்.
Advertisement
இது தொடா்பாக அவா் கூறுகையில், தொழிலாளா்களின் திருமணங்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளின் கல்விக்காக தில்லி அரசு உதவ விரும்புகிறது. பல்வேறு அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு, தில்லி கட்டட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் (டி.பி.ஓ.சி.டபிள்யு.டபிள்யு.பி.) புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் தொழிலாளா்கள் தங்களைப் பதிவு செய்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
தொழிலாளா்களைப் பதிவு செய்வதற்காக, தொழிலாளா் செளக் பகுதிகளில் சிறப்பு முகாம்களைத் தொழிலாளா் துறை நடத்தும். விரைவில், கா்ப்பிணித் தொழிலாளா்களுக்கு ஒரு சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.
கட்டுமானத் தளங்கள் மற்றும் தொழிலாளா் சந்திப்புகளில் உள்ள தொழிலாளா்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, அரசு சிறப்பு நடமாடும் வாகனங்களைத் தயாா் செய்து வருகிறது. தொழிலாளா்களின் மகள்களின் திருமணங்களுக்காக அவா்களுக்கு நேரடி நிதியுதவியும் வழங்கப்படும். தொழிலாளா்களின் மகள்களுக்காக ஆண்டுதோறும் இரண்டு முறை மாபெரும் திருமண விழாக்கள் நடத்தப்படும் என்றாா் முதல்வா்.
தில்லி தொழிலாளா் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா தெரிவிக்கையில், ‘தொழிலாளா்களைப் பதிவு செய்வதற்கான இணையதளம் பல ஆண்டுகளாகச் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. தற்போது அது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக, டி.பி.ஓ.சி.டபிள்யு.டபிள்யு.பி.இன் திட்டங்கள் குறித்து யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், முதல்வர் குப்தாவின் வழிகாட்டுதலின் கீழ், பல்வேறு நலத்திட்ட முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாசு காரணமாகக் கட்டுமானப் பணிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த சமயத்தில், பதிவு செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு அரசு ரூ. 10,000 நிதியுதவி வழங்கியது. நகரில் உள்ள தொழிலாளா்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதிலும், அவா்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதிலும் தொழிலாளா் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.