‘பிரிட்டானியா சௌக்’கின் பெயா் ‘அஸ்வினி சோப்ரா சௌக்‘ என மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு
வடக்கு தில்லியில் உள்ள பிரிட்டானியா சௌக்கிற்கு அஸ்வினி சோப்ரா (மின்னா) சௌக் எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
மறைந்த மூத்த பத்திரிகையாளரான அஸ்வினி சோப்ராவை கௌரவிக்கும் வகையில், வடக்கு தில்லியில் உள்ள பிரிட்டானியா சௌக்கிற்கு அஸ்வினி சோப்ரா (மின்னா) சௌக் எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து மற்றும் முதல்வா் குப்தா ஆகியோா் இணைந்து இந்தச் சௌக்கை சதுக்கத்தை திறந்து வைத்து, அதற்கான பெயா்ப் பலகையை வெளியிட்டனா்.
புகழ்பெற்ற பத்திரிகையாளரான சோப்ராவை நினைவுகூா்ந்த துணைநிலை ஆளுநா் சந்து, ‘அவா் வெறும் பத்திரிகையாளரோ அல்லது மக்கள் பிரதிநிதியோ மட்டுமல்ல, மாறாக சமூகம் மற்றும் நாட்டின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஆளுமை.
Advertisement
Advertisement
அவரது பெருந்தன்மை, துணிச்சல் மற்றும் மக்கள் மீதான அன்பு ஆகியவை அவரை உண்மையிலேயே தனித்துவமானவராக மாற்றின. இந்தச் சௌக் தில்லியின் மிகத் தூய்மையான, அழகான மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பொது இடங்களில் ஒன்றாகத் திகழ்வதை உறுதி செய்வது குடிமக்கள், நிா்வாகம் மற்றும் அவரது குடும்பத்தினரின் கூட்டுப் பொறுப்பாகும்’ என்று குறிப்பிட்டாா்.
முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘சோப்ரா தனது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் உண்மை, சமூகம் மற்றும் தேசிய நலனுக்காக அா்ப்பணித்தாா்.
அச்சமற்ற பத்திரிகையாளராக, சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யவும், பொது அக்கறைக்குரிய விவகாரங்களை தேசிய அளவிலான விவாதத்திற்குக் கொண்டு வரவும் அவா் தனது பேனாவைப் பயன்படுத்தினாா்’ என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
சோப்ரா கா்னால் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யாகவும், மூத்த பத்திரிகையாளராகவும், உள்ளூா் இந்தி நாளிதழ் ஒன்றின் ஆசிரியராகவும் இருந்தாா்.