தமிழ் மக்களின் தொல்சமயம்
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல் போன்றவற்றுக்கு உள்ளார்ந்த பொருள்களை, உண்மைப் பொருள்களை மானிடவியலின் துணைகொண்டு விளக்குகிறார் நூலாசிரியர்.
தமிழ் மக்களின் தொல்சமயம் - அ. பாண்டுரங்கன்; பக்.400; ரூ. 340; கோரல் பப்ளிஷர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், திருமுல்லைவாயல், சென்னை - 600 109.
புதிய பொருளுடன் புதிய கருத்துகள் விரவிக் கிடக்க வெளிவந்துள்ள தொன்மை பற்றிய சிறப்பான நூல் "தமிழ் மக்களின் தொல்சமயம்'.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல் போன்றவற்றுக்கு உள்ளார்ந்த பொருள்களை, உண்மைப் பொருள்களை மானிடவியலின் துணைகொண்டு விளக்குகிறார் நூலாசிரியர்.
உலகிலுள்ள பல்வேறு இனங்களைப் போலவே தமிழினமும் எவ்வாறு பல படிநிலைகளைக் கடந்து நாகரிக சமுதாயமாக உயர்ந்தது என்பதைத் தொல்லியல் சான்றுகளுடனும் தொல்காப்பிய இலக்கணப் பனுவல், தொகை நூல் பாடல்களைக் கொண்டும் விவரிக்கிறது இந்த நூல்.
சேர, பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் தொகுக்கப்பட்டவை சங்கப் பாடல்கள்; அவர்கள் ஆரியர்களின் வைதிக சமயத்தைப் போற்றியவர்கள்; அவர்கள் தங்கள் அரசியல், சமூகத் தேவைகளுக்கேற்பவே பாடல்களைத் தொகுக்கச் செய்திருப்பார்கள் எனக் கூறும்
நூலாசிரியர், பழந்தமிழ்ச் சமூகம் தொடர்பான எல்லாச் செய்திகளையும் ஆவணப்படுத்தும் வகையில் சங்க இலக்கியத் தொகுப்புகள் அமையவில்லை என்கிறார்.
தமிழ் மக்களின் இனக் குழு வாழ்வு சிதைந்து வேந்தர்கள் ஆட்சி உருவாகத் தொடங்கிய காலத்தில் தமிழ்த் தெய்வங்கள் எவ்வாறு மாற்றம் பெற்றன என்பதை விளக்கும் நூல், தொன்றுதொட்டுவரும் மணமுறைச் சடங்குகள், குலக்குறிகள் பற்றியும் எடுத்துச் சொல்கிறது.
மீவியல் உலகம் பற்றிய இயலில் உயர்நிலை உலகம், மேலோர் உலகம் போன்ற தமிழ் மரபுக்குரிய கருத்துகள் - அந்தணர் வைதிகப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டவை என்பதை - சங்க இலக்கியத் தரவுகள் உதவியுடன் நிறுவுகிறார் ஆசிரியர். தாய்த் தெய்வம் பற்றிய விவரிப்பும் சிறப்பு.
நீத்தார் நினைவு இயலில் தொல்லியல் சின்னங்கள் பற்றி விளக்கியுள்ள ஆசிரியர், பதுக்கைகள், முதுமக்கள் தாழிகள் பற்றிக் கூறுவதுடன் நடுகற்கள் வழிபாட்டையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
நூலில் பிரதானமாக இடம்பெற்றுள்ள சடங்குகள் பற்றிய இயலில் கிடைக்கப்பெறும் அளவற்ற தகவல்கள் குறிப்பிடத் தக்கவை. இந்நூல், நாம் இதுவரை அறிந்த விஷயங்களைப் புதிய தடத்தில் புதிய பார்வையில் வெளிச்சமிடுகிறது என்று கூறலாம்.