கோவில்கள் - வரலாறு, வழிபாடு, விழாக்கள்-சைதை முரளி; பக்.232; ரூ.280; சுவாசம் பதிப்பகம், பொன்மார், சென்னை 600 127, ✆ 81480 66645.
ஆலய தரிசனம், விழாக்களும் விசேஷங்களும் என்று இரண்டு பகுதிகளாக 45 அத்தியாயங்களில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. ஆலய தரிசனம் பகுதியில் 32 திருத்தலங்கள் பற்றியும் இரண்டாம் பகுதியில் 13 சமய-வழிபாட்டு கட்டுரைகளும் உள்ளன.
தமிழகத்தின் பிரதான கோயில்களுடன் நாட்டின் பிற மாநிலங்களில் அமைந்துள்ள குறிப்பிடத்தகுந்த சில கோயில்களைப் பற்றிய விவரங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள மந்திராலயம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
திருச்சி அருகேயுள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பற்றி 'சாதித்தால் சமயபுரம்' என்ற வாக்கியம் ஒன்றுண்டு. அன்னை மாரியம்மன் அருள்பாலிக்கும் அந்தக் கோயிலுக்கும் துவண்டு போயிருந்த விஜயநகரப் பேரரசு மீண்டு எழுந்ததற்கும் உள்ள தொடர்பை ஒரு கட்டுரை விவரிக்கிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி என்னும் தலத்தில் உள்ள பெருமாள் 'மைத்துனர் பெருமாள்' என்று அறியப்படும் கதை சுவைபடக் கூறப்பட்டுள்ளது.
தல வரலாறு, கோயில் தொடர்பான ஐதிகக் கதைகளைச் சொல்வது என்பதோடு நின்றுவிடாமல், இரண்டாம் பகுதியில் பற்பல விஷயங்களை சுவையான நடையில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.
வைணவர்கள் 'கோயில்' என்று குறிப்பிட்டாலே அது ஸ்ரீரங்கம்தான். பூலோகத்தில் உள்ள திவ்யதேசங்களில் பிரதானமானது; 'நல்லார்கள் வாழும் நளிரரங்கம்' என்று புகழப்படும் தலமாகும். அத்திருத்தலம் பற்றியும் அங்கு பள்ளிகொண்டுள்ள பெருமாள் குறித்தும் கூறியுள்ளார் நூலாசிரியர்.
'ஸ்ரீராம நவமியும் ராம நவமி மகிமையும்' என்னும் கட்டுரையில் சின்னஞ்சிறு பக்திக் கதைகள், ஏராளமான தகவல்கள் தரப்பட்டுள்ளன. பக்தி-சமயம் தொடர்பாக வித்தியாசமாக, சுவைபட உருவாக்கப்பட்டுள்ள புத்தகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.