பேரலையின் சாட்சியம் (1964, டிசம்பர் 23)-கு.காந்தி; பக்.96; ரூ.100; பாரதி புத்தகாலயம், சென்னை-600018. ✆ 044-24332924.
கருப்பையா என்ற முதியவர் மல்லிகா என்ற தனது காதலிக்குக் கொடுக்க வேண்டிய ஒரு நினைவுப் பரிசை சுமந்துகொண்டு பயணப்படுகிறார். அதிலிருந்து தொடங்குகிறது இந்த நாவல். தனது மகன், மருமகள், பேத்திகளுடன் பயணிக்கும்போதே கருப்பையா பகிரும் விஷயங்களையும், அவர் பகிராத விஷயங்களையும் நமக்கு பக்கங்களில் பரப்பி வைத்து கட்டிப்போட்டு இருக்கிறார் நாவலாசிரியர்.
அரசு வேலைக்குப் போக வேண்டியவன் ஜாதி கலவரத்தில் வைக்கப்பட்ட தீயில் சான்றிதழ்கள் கருகிப்போய் தடம் மாறிய வாழ்க்கை அவனை ஒரு கூலித் தொழிலாளியாக்கிய அவல நிலையை ஒற்றை வரியில் சொல்லி நகரும்போது நமக்கு இந்த சமுதாயத்தின் மீது கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
நாவலாசிரியரின் எழுத்து நடை, நம்மை ரயிலில் பயணிக்க வைக்கிறது; தீவில் பூ விற்க வைக்கிறது; பணிந்து நடக்கும் ஒரு தொழிலாளியாக பொதி சுமக்க வைக்கிறது. நாவலின் திருப்புமுனை நிகழ்வுகள் நிகழும்போது, நம்மைச் சுற்றி மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவின் இருள் கவ்வுகிறது; காற்று ஊளையிடுகிறது; மழையின் பேரிரைச்சல் கேட்கிறது; காற்றில் பறக்கும் கூரைகளின் படபடப்பு கேட்கிறது.
பேரலையின் சாட்சியாக இருப்பது இடிந்த கட்டடங்களோ, மணல்மேடுகளோ, காணாமல் போனவர்களின் நினைவுகளோ அல்ல; அது கருப்பையாவிடம் இருந்த பொக்கிஷம்தான். கருவாயன் கருப்பையாயும், பேரழகி மல்லிகாவும் தம்பதியராகத்தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.