திருக்குறள் நீதி இலக்கியம்
1974-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளது இந்த நூல்.
திருக்குறள் நீதி இலக்கியம்-இலக்கிய விமர்சனம் - க.த.திருநாவுக்கரசு; பக்.376; ரூ.400; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2433 1510.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சி வெளியீட்டு வரிசையில் இரண்டாவது நூலாக இடம்பெற்றுள்ள இந்த நூலை நூலாசிரியர் க.த. திருநாவுக்கரசு ஆராய்ந்து இயற்றியுள்ளார். 1974-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளது இந்த நூல்.
இலக்கியங்களில் அறநெறிக் கருத்துகள் பெறுமிடத்தைச் சீர்தூக்கி ஆராய்வதன் மூலம், திருக்குறள் நீதி இலக்கியமாக விளங்கும் திறத்தை சுட்டிக்காட்டுவதே இந்த நூலின் நோக்கம் என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.
Advertisement
கற்பவரை உணர்ச்சிப் பெருக்கால் கிளர்ச்சி அடையச் செய்யாது சிறந்த கருத்துகளை அறிவுறுத்தி, அவர்களுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை நீதி நூல்கள் என்ற கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.
கிரேக்க புலவர் ஹெஸியட் இயற்றிய 'வேலையும் நாள்களும்' அந்நாட்டு நீதி இலக்கியமாகும்.
அதில் கூறப்பட்டுள்ள சில கருத்துகள் திருக்குறளுடன் ஒத்துள்ளன. எப்பொருளையும் அளவாக கப்பலில் ஏற்று; அளவுக்கு மிஞ்சினால் அடித்தளம் முறிந்து விடும் என்று கிரேக்க நூலில் கூறப்பட்டுள்ளது. அதையே 'பீலிபெய் சாகாடும்' என்னும் திருக்குறள் உணர்த்துகிறது. இது போன்ற சான்றுகள் நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
திருக்குறளுக்கு ஈடான நீதி இலக்கியத்தை உலகச் செம்மொழிகளில் வேறொன்றிலும் காணமுடியவில்லை என்பதில் நாம் என்றும் பெருமைப்படலாம்.