தசாபுக்தியில் ஸ்ரீமத்ராமாயண பாராயண க்ரமம்
ஜோதிடர்களுக்கும், ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் தங்களது தசாபுக்தியில் ராமாயணப் பகுதிகளை பாராயணம் செய்ய விழைபவர்களுக்குமான புத்தகம் தசாபுக்தியில் ஸ்ரீமத் ராமாயண பாராயண க்ரமம்.
தசாபுக்தியில் ஸ்ரீமத்ராமாயண பாராயண க்ரமம் (உமாஸம்ஹிதை)- தொகுப்பாசிரியர் டாக்டர் தி.சு. ராகவன்; பக். 308; ரூ. 750; கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், சென்னை- 600 122, ✆ 80697 98989.
ஆரூடம் என்பதைக் கலையாகவும், அறிவியல் ரீதியிலும் நம் முன்னோர்கள் அணுகினார்கள் என்பதுதான் உண்மை. எந்தவிதமான தொழில்நுட்பமோ, உபகரணங்களோ இல்லாத காலத்தில் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது மட்டுமல்லாமல், மிகத் துல்லியமாகக் கோள்கள் குறித்தும் அவற்றின் இடங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கமும் நடைபெறுகிறது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தந்த கிரகங்களின் ஆதிக்கக் காலத்தை 'தசை' என்கிறார்கள். ஒவ்வொரு தசையிலும் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் அல்லாமல், ஏனைய எட்டு கிரகங்களின் சஞ்சாரமும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போகின்றன. அதை 'புக்தி' என்கிறார்கள். ராசியில் அமைந்திருக்கும் கிரகங்கள், அவற்றின் தசைகள், அந்தந்த தசையின் ஏனைய கிரகங்களின் சஞ்சாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விற்பன்னர்களின் ஆரூடம் வழங்கப்படுகிறது.
Advertisement
ஒருவரின் வாழ்க்கையில் தசைகள், தசையிலான புக்தி என்ற கணக்குப் போட்டால் மொத்தம் 90 தசா புக்திகள் வந்து போகின்றன. 'உமா சம்ஹிதா' என்கிற சம்ஸ்கிருத நூல், பரமசிவன்- பார்வதி இடையேயான உரையாடல் பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு தசாபுக்தியின் போதும், பாராயணம் செய்ய வேண்டிய ராமாயணத்தின் குறிப்பிட்ட பகுதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உமா சம்ஹிதா அடிப்படையில் தசா புக்திகளுக்கான ராமாயண பாராயணம் அனைவரும் படிக்கும் வகையில் தேவநாகரி மற்றும் தமிழில், தனித்தனியான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ஜோதிடர்களுக்கும், ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் தங்களது தசாபுக்தியில் ராமாயணப் பகுதிகளை பாராயணம் செய்ய விழைபவர்களுக்குமான புத்தகம் தசாபுக்தியில் ஸ்ரீமத் ராமாயண பாராயண க்ரமம்.