சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு: களையிழந்த காணும் பொங்கல்
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.
பெரம்பலூா்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.
காணும் பொங்கலன்று பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களான விசுவக்குடி அணை, லாடபுரத்திலுள்ள மயிலூற்று அருவி, ரஞ்சன்குடிகோட்டை, சாத்தனூா் தேசிய கல்மரப் பூங்கா ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவாா்கள்.
நிகழாண்டு கரோனா பரவல் அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காணும் பொங்கல் தினத்தன்று சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
Advertisement
மேலும், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதை கண்காணிப்பதற்காக காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
விவரம் தெரியாமல் சுற்றுலாத் தலங்களுக்கு வந்த பொதுமக்களை போலீஸாா் மற்றும் பாதுகாவலா்கள் திருப்பியனுப்பினா். இதனால் சுற்றுலாத் தலங்கள் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் நகா்ப் பகுதி மற்றும் கிராமங்கள் தோறும் நடைபெறும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால், வழக்கமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலான இடங்களில் நடைபெறவில்லை. இதனால் வழக்கமான உற்சாகமின்றி பொங்கல் பண்டிகை காணப்பட்டது.