முகப்பு
ஆன்மிகம்

ஒரகடம் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஆலய ஸம்ப்ரோக்ஷணம்

காஞ்சி மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் திருக்கழுக்குன்றத்திலிருந்து சுமார் 5 கி.மி தூரத்தில் அமைந்துள்ள சிறுகிராமம் ஒரகடம்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

காஞ்சி மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் திருக்கழுக்குன்றத்திலிருந்து சுமார் 5 கி.மி தூரத்தில் அமைந்துள்ள சிறுகிராமம் ஒரகடம். ஸ்ரீ அஹோபில மடத்தின் ஜீயர் ஸ்வாமியாக விளங்கி 6ம் பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீ ஷஷ்ட்ட பராங்குச யதீந்திர மஹா தேசிகன் இக்கிராமத்திற்கு எழுந்தருளிய போது அக்ரஹாரத்தை நிர்மணித்ததால் பராங்குசபுரம் என்ற காரணப்பெயரும் உண்டு. இக்கிராமத்தில் ஸ்ரீ அஹோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், சுமார் 1500 வருடங்கள் பழமையானது. 2ஆம் மகேஸ்வர பல்லவ மன்னனால் கட்டப்பட்டு சிறந்த கட்டிட மற்றும் சிற்பக்கலை நுணுக்கங்கள் நிறைந்ததாக திகழ்கின்றது.

இத்திருக்கோயிலில் மூலஸ்தானத்தில் ஸ்ரீ கோதண்டராமன் யோகம், போகம், வீரம் என்ற மூன்று நிலைகளையும் ஒரு சேரப் பிலதிபலிக்கும் வகையில் பிராட்டியுடன் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி தருவது எங்கும் காணக்கிடைக்காத அற்புதமாகும். ஸ்ரீ ரிஷ்யசிருங்க மஹரிஷி தவம் செய்த பெருமையுடைய இத்தலத்திற்கு உண்டு.

மூலவரோடு காட்சிதரும் இளைய பெருமாள் கரத்தில் வில் ஏந்தாமல் கரம் குவித்து காணப்படுவது மற்றொரு அதிசயமாகும். மேலும் இங்கு எழுந்தருளியுள்ள உற்சவ மூர்த்தியான ரகுநந்தன் ஜாதகங்களில் புத்திர தோஷமிருப்பின் அதனைப் போக்கி மழலைப்பாக்கியம் அருளுவதால் இவருக்கு சந்தான ராமன் என்ற பெயரும் உண்டு.

இவ்வாலயத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த ஸம்ப்ரோக்ஷணத்திற்குப் பிறகு காலப்போக்கில் சிதிலமடைந்ததால் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற உள்ளன. அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண மஹா ஸம்ப்ரோக்ஷண வைபவம் ஸ்ரீ அஹோபிலமடம் 46வது பட்டம் ஸ்ரீ மதழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாத யதீந்தர மஹாதேசிகன் அனுக்கிரஹத்துடன் பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மஹா ஸம்ப்ரோக்ஷணமும் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருவடி கோயில் ஸம்ப்ரோக்ஷணமும் நடைபெறுகின்றது. மாலை திருக்கல்யாணமும் வீதியுலா புறப்பாடும் நடைபெறும். யாகசாலை ஹோமம் பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஸம்ப்ரோக்ஷண வைபவத்தை தொடர்ந்து நடைபெறும் மண்டலாபிஷேகத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மற்றும் நிறைவு பெற வேண்டிய இதர ஆலய பணிகளுக்கும் கைங்கர்யம் செய்ய விரும்புவர்கள் ஸ்ரீ கண்ணன் செல்: 9444084653 மற்றும் ஸ்ரீரவி - செல் 9444156638 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இத்திருக்கோவிலுக்குச் செல்ல செங்கல்பட்டு, திருக்கழுகுன்றத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.