சோழ மன்னனுக்கு லிங்க வடிவில் காட்சி தந்த தர்மலிங்கேஸ்வரர்
நங்கநல்லூர், மூவரசம்பேட்டை, மடிப்பாக்கம் இம்மூன்று ஊர்களும் சேருமிடத்தில் இக்கோயில் உள்ளது.
நங்கநல்லூர், மூவரசம்பேட்டை, மடிப்பாக்கம் இம்மூன்று ஊர்களும் சேருமிடத்தில் இக்கோயில் உள்ளது.
சோழர் காலத்திற்கும் முற்பட்ட இத்தலத்தின் புராதனப்பெயர் தன்மீச்வரம். இறைவன் தர்மலிங்கேஸ்வரர். இவருக்கு தன்மீஸ்வரர், வீரசிங்கர் என்ற திருநாமங்களும் உண்டு. அம்மன் சர்வமங்களா தேவி. தலவிருட்சம் வில்வம்.
இங்கு உள்ள வினாயகரின் பெயர் தன்மீச வினாயகர் என்றே பெயர் தென்மேற்கில் அரசும் வேம்பும் உள்ள மரத்தடியில் ஒரு கணபதியும் இரு நாகர்களும் உள்ளனர் எழிலான மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தெற்கிலும் ஒரு கோபுரம் உள்ளது. கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி கடந்து லிங்க வடிவில் இறைவன். அம்பிகை சர்வமங்களாதேவி தெற்கு நோக்கியுள்ளார்.
சோழ சக்கரவர்த்தி ராஜராஜன் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போது காரியாதித்த சோழன் குறுநில மன்னனாக இருந்தான். இவன் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதி கோயில்களில் உழவாரப்பணி செய்தான். ஒரு முறை இவன் தன்மீச்வரம் வந்தபோது அங்கு பசுமையாக வயல்வெளிகள் காட்சி தந்ததை பார்த்து அன்றிரவு அங்கேயே தங்கினான்.
இரவு முடிந்து பகல் விடிந்தும் அரசன் எழுந்திருக்காததை கண்ட வீரர்கள், அவனை எழுப்பவும் பயந்தனர். இந்த நேரத்தில் கோயில் மணி ஓசை மிக சத்தமாக கேட்டது. மன்னன் விழித்துக் கொண்டான். ஓசை வந்த திசை நோக்கி சென்ற சோழ மன்னனுக்கு லிங்க வடிவில் காட்சி தந்தார் சிவன். இந்த தரிசனத்தினால் மன்னன் மகிழ்ந்தாலும், கோயில் மிகவும் சிதிலமடைந்திருப்பது கண்டு வருந்தினான். அத்துடன் தன்னை எழுப்பிய ஈசனின் ஆலயத்தில் தினமும் கோயில் மணியோசை கேட்க வேண்டும் என நினைத்தான்.
கோயில் திருப்பணிக்காவும், பூஜை நேரங்களில் இசைக் கருவிகள் முழங்குவதற்கும், அத்தலத்தின் அருகே உள்ள நிலங்களின் வருமானத்தை வழங்க முடிவு செய்தான். சந்திர சூரியர்கள் உள்ளவரை கோயில் சிவப்பணி தொடர்வதற்காக இந்த நிலங்களை அளிப்பதாக கோயில் கல்வெட்டுக்களில் பொறித்தான்.
கிழக்கு நோக்கிய இறைவன் தெற்கு நோக்கிய அம்பிகை. மேற்கு நோக்கிய வீரபத்திரர், வடமேற்கில் உயரமான மேடை போன்ற சிற்றாலயத்தில் மேற்கு நோக்கிய முருகன். புதிய இடைசெருகலாக அனுமன் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
- கடம்பூர் விஜயன்