எலி வளை என்றாலும் தனி வளையாக இருக்க வேண்டும் என்பது பழமொழி. சொந்த வீட்டில் வாழ்வதென்பது ஒரு தனி பெருமையும், மகிழ்ச்சியும் கூட. நமக்கென்று சொந்த வீடு இருப்பது எப்போதும் மனநிறைவை அளிக்கும். ஆனால், இப்பொழுது வளர்ந்துவரும் டெக்னாலஜியில் சொந்தவீடு என்பது பலருக்கு எட்டாக்கனியாகத் தான் உள்ளது.
ஒரு சிலர் பணவசதி படைத்தவராக இருந்தாலும், சொந்த வீடு வாங்கும் யோகம் அமையாது. அப்படியே சொந்த மண் வாங்கினாலும், அதைக் கட்டி குடிபோகும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை.
சொந்த வீடு கட்டும் யோகம் அமைய என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் பரிகாரம் செய்யலாமா? என்று கேட்பவருக்கு நிச்சயம் உள்ளது.
ஜாதகருக்கு சொந்த வீடு கட்டும் யோகம் அவரது ஜாதகத்தில் இருக்க வேண்டும். சொந்தவீடு யோகம் ஜாதகருக்கு இல்லையெனில் என்னதான் முட்டி மோதினாலும் அமைவது கடினம் தான். சொந்தவீடு கட்டி குடிபோனாலும், அது நிலைக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும்.
செவ்வாய் பலம் கூடுவதற்கான சில பரிகாரங்களைப் பார்க்கலாம்....
• ஜாதகருக்கு செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். அந்தத் தடை நீங்க செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு மலர்களால் அங்காரகனைப் பூஜித்து வர வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
• நிலம் அமைந்து, வீடு கட்ட தாமதமாகினால், திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை வணங்கி "ஓம் சரவண பவ" எனும் மந்திரத்தை உச்சாடனம் செய்து ஆலயத்திலேயே 6 மணி நேரம் தங்கி, அங்குள்ள கடல் நீரை எடுத்து அதில் மஞ்சள் கலந்து நீங்கள் கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி தெளிக்க வேண்டும்.
• சிறுவாபுரியில் உள்ள முருகப்பெருமானை ஒன்பது செவ்வாயன்று வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும்.
• சொந்த வீடு யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரலாம்.
• செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுத்து வந்தாலும் சொந்தவீடு நிச்சயம் அமையும்.
• ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.