தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்குச் சென்று, அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே திருச்செந்தூருக்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
படம்: கே. அண்ணாமலை