குறைகள் நீக்கும் குணசீலனின் பெருந்திருவிழா
திருச்சி மாவட்டம் குணசீலம் அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி ஒரு புரட்டாசி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் குணசீல மகரிஷிக்குக் காட்சி தந்து,
திருச்சி மாவட்டம் குணசீலம் அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி ஒரு புரட்டாசி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் குணசீல மகரிஷிக்குக் காட்சி தந்து, மக்களின் குறைகளை எல்லாம் தீர்த்தருளுவதற்காக தென் திருப்பதி எனப்படும் இத்தலத்தில் வசிக்கப்போவதாக தெரிவித்து இங்கிருந்து அருளுகிறார். அந்நாள் பிரும்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
குறைகள் அனைத்தையும் போக்கும் குணசீலப் பெருமாளின் புரட்டாசி மாத பிரும்மோற்சவப் பெருவிழா 02.10.2016 முதல் துவங்கி 13.10.2016 வரை காலை, மாலைகளில் பலவித அலங்காரங்களிலும் வாகனங்களிலும் உலக நலன் வேண்டி வீதிபுறப்பாடாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அக்.3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இரவு அன்ன வாகனத்திலும், தொடர்ந்து சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் எனத் தொடர்ந்து 08.10.2016 4-வது சனிக்கிழமை அன்று யானை வாகனத்திலும், 09.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாணமும், புஷ்பக விமானத்திலும் சேவை சாதிக்கிறார்.
அக்.10-ம் தேதி குதிரை வாகனத்திலும், 11-ம் தேதியன்று பெருமாள் தேருக்கு எழுந்தருளி காலை 8.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேர் உற்சவம் நடைபெறும். மாலை தீர்த்தவாரி உற்சவமும், 12-ம் தேதி துவாதச ஆராதனமும், 13-ம் தேதி ஆடும் பல்லக்கில் புறப்பாடும் நடைபெறும். அக்.07 அன்று மூலவர் முத்தங்கி சேவையும் நடைபெற உள்ளது..
11-ம் தேதி நடைபெறும் திருத்தேர் உற்சவம் தீர்த்தவாரி மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழா ஆகும். அந்நாளில் பெருமாளை தேரில் சேவிப்பவர்களுக்கு குறை எல்லாம் நீங்கி இகபர சுகங்கள் அனைத்தும் கிடைக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசிப்பவர்களுக்கு திருமண பிராப்தியும், சந்தான பிராப்தியும் கிடைக்கும். எனவே இந்நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சென்று சேவித்து பலனடைய வேண்டுகிறோம்.