செய்திகள்

திருச்செந்தூரில் வைகாசி வசந்த விழா

தினமணி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி வசந்த திருவிழாவின் முதல் நாளான சனிக்கிழமை சுவாமி ஜயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக 10 நாட்கள் நடைபெறுகிறது. 
சனிக்கிழமை மாலை கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர் கோயிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வரும் வைபவம் நடைபெற்றது. 
அப்போது ஒவ்வொரு சுற்றிலும் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாகசுரம், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு முதலானவை பாடப்பெற்றது.
வசந்த திருவிழாவின் நிறைவு நாளான விசாகத் திருவிழா வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. 
இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.
மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. 
அதைத்தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்று, தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயிலை அடைவார். 
இந்த நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு, கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரதமிருந்தும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
வசந்த மண்டபத்தில் தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜயந்திநாதருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT