அழகர் மலை மீதுள்ள நூபுர கங்கையில் சுந்தரராஜப் பெருமாளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாளுக்கு ஐப்பசி மாதம் நடைபெறும் வைபவமானது, அழகர் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் நூபுர கங்கையில் தீர்த்தவாரிக்குச் சென்று திரும்புவதாகும். இந்த வைபவம், கடந்த 7-ஆம் தேதி மாலை தொடங்கியது. அப்போது, பெருமாள் நவநீதகிருஷ்ணன் மண்டபம் சென்று திரும்பினார். பின்னர், 8-ஆம் தேதி சொர்க்கவாசல் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.
தொடர்ந்து, சனிக்கிழமை காலை பல்லக்கில் மலைக்குப் புறப்பட்டார். அப்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர். கருட தீர்த்தம், அனுமன் தீர்த்தம், சோலைமலை முருகன் கோயிலிலும் சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
இதையடுத்து, ராக்காயி அம்மன் கோயிலில் மாதவி மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர், பெருமாளுக்கு மூலிகை மருந்துகள் கலந்த வாசனைத் தைலங்கள் சாத்தப்பட்டன.
தொடர்ந்து, நூபுரகங்கை தீர்த்தத்தில் பெருமாளுக்கு நீண்டநேரம் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், பெருமாள் மீண்டும் அடிவாரத்திலுள்ள கோயிலுக்குத் திரும்பினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்து வழிபட்டனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.