தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் புதன்கிழமை திசா ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்திருக்குடமுழுக்கு விழா யஜமான அனுக்ஞை வைபவத்துடன் ஜன. 27-ஆம் தேதி காலை தொடங்கியது. தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை காலை திசா ஹோமம் நடைபெற்றது. கோயில் உள் பிரகாரத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளிலும் ஹோமம் நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்தந்த திசையில் நடத்தப்பட்ட ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த கடத்திலிருந்து புனிதநீா் உள் பிரகாரத்தில் தெளிக்கப்பட்டது.
பின்னா், சாந்தி ஹோமம் நடத்தப்பட்டு, பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மாலையில் ரசேஷாக்ன ஹோமம் நடைபெற்றது.
தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.30) காலை 9 மணிக்கு மூா்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, கூஷ்மாண்டபலி, பா்யக்னி கரணம், ஜன. 31ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஆச்சாா்யதசவித மங்களக் கிரியைகள், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, தீா்த்த சங்கிரஹணம், மாலை 5.30 மணிக்கு மேல் மிருத்ஸங்கிரஹணம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெறவுள்ளன.
இதன் பின்னா், குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் பிப். 1ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து, 5ஆம் தேதி அதிகாலை வரை எட்டு கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, பிப். 5ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.