பழனியில் திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம்: இன்று தைப் பூசத் தேரோட்டம்
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பழனி: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை (ஜன. 28) மாலை தேரடியில் நடைபெறுகிறது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச விழா கடந்த ஜன.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி வெள்ளி காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் உலா வந்தார்.
இந்நிலையில் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சோடஷ அபிஷேகமும், தொடர்ந்து சோடஷ உபசாரமும் நடைபெற்றன.
மங்கலநாணுக்கு பூஜைகள் நடைபெற்ற பின்னர் மேள, தாளங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, ஓதுவார்கள் திருமுறைப்பாடல்கள் பாட மங்கலநாண் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தம்பதி சமேதர் முத்துக்குமாரசுவாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் எழுந்தருளியதும், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் உலா வந்தபோது நான்கு ரத வீதிகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று தைப்பூசத் தேரோட்டம்: முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் தேரடியில் வியாழக்கிழமை (ஜன. 28) மாலை நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக ஜன.31}ஆம் தேதி தெப்பத்தேர் உலா மற்றும் கொடி இறக்கம் நடைபெறுகிறது.