மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் முடவன் முழுக்கு விழா
மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத துலா உத்ஸவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு இறைவன் காட்சி தந்த ஐதீக விழாவான முடவன் முழுக்கு உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத துலா உத்ஸவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு இறைவன் காட்சி தந்த ஐதீக விழாவான முடவன் முழுக்கு உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலா உத்ஸவம் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் காவிரியில் புனித நீராடி, இறைவனை வழிபட்டு தங்கள் பாவச்சுமைகளை போக்கிக்கொண்டதாக ஐதீகம்.
இந்த உத்ஸவத்தில் நீராட விரும்பிய உடல் ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதம் முடிவதற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. அந்த பக்தருக்கு ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை இறைவன் அளித்ததாகவும் துலாக் கட்ட புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாள் முடவன் முழுக்கு தீர்த்தவாரி நடைபெறும்.
இதையொட்டி, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் தென்கரையில் மாயூரநாதர் சுவாமியும், வடக்குக் கரையில் வதான்யேஸ்வரர் சுவாமியும் புதன்கிழமை எழுந்தருளினர். பின்னர் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.