மதுரை புறப்பட்டார் கள்ளழகர்!
மதுரை புறப்பட்ட கள்ளழகர் குறித்து...
கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
மதுரை அழகர்கோயிலில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 27) தொடங்கி மே 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உத்ஸவர் சுந்தரராஜப் பெருமாள் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று (ஏப். 29) மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிலையில், கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார்.
Advertisement
Advertisement
நாளை(ஏப். 30) காலை 5.50 மணிக்கு தங்கப் பல்லக்கில் மதுரை கோ. புதூர் மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி சேவை சாதிக்கும் பெருமாள், இரவு 8.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு எழுந்தருளுகிறார். இரவு 11.30 மணி அளவில் இங்கு நடைபெறும் திருமஞ்சனத்துக்கு பிறகு, கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த திருமாலையை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
வெள்ளிக்கிழமை (மே 1) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் எதிரே நிறுத்தப்பட்டிருக்கும் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி சேவைசாதிக்கிறார். பிறகு, அங்கிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, மங்கள வாத்திய முழக்கங்களுடன் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குப் புறப்பாடாகிறார். இதைத் தொடா்ந்து, காலை 5.30 மணி அளவில் அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.
இதையடுத்து, வைகை ஆற்றிலிருந்து வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். வீரராகவப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் காணும் கள்ளழகர் ஏகாந்த சேவை சாதிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 2) காலை 6 மணிக்கு நடைபெறும். பின்னர், கள்ளழகர் தேனூர் மண்டபத்துக்கு எழுந்தருளி மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறும். இதையடுத்து, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் கள்ளழகர் சேவை சாதிக்கும் நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் புறப்பாடாகி இரவு 11 மணிக்கு தல்லாகுளம் சேதுபதி மன்னர் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
திங்கள்கிழமை (ஏப். 4) அதிகாலை கள்ளழகர் சேதுபதி மன்னர் மண்படத்திலிருந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு எழுந்தருளுகிறார். பிறகு, ஐதீக முறைப்படியான மண்டகப்படிகளில் எழுந்தருளும் பெருமாள் மே 6-ஆம் தேதி கள்ளழகர் கோயிலை அடைகிறார். அங்கு நடைபெறும் உத்ஸவ சாந்தி வழிபாட்டுடன் கள்ளழகர் கோயிலின் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.