பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் இணைக்கும் உன்னத விழா: ஆளுநர்
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் பக்தியில் இணைக்கும் ஓர் உன்னத திருவிழா என ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் கூறியது குறித்து...
மதுரையில் சித்திரை திருவிழாவை பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் பக்தியில் இணைக்கும் ஓர் உன்னத திருவிழா என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் போற்றியுள்ளார்.
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்வு குறித்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்திருப்பதாவது, "சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு, சித்திரை பௌர்ணமியன்று மதுரையில் வைகை ஆற்றில், அழகர் இறங்கும் வைபவம். பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் பக்தியில் இணைக்கும் ஓர் உன்னதவிழா.
தவளையாக சாபம் பெற்ற மண்டூகமகரிஷிக்கு விமோசனம் கொடுக்க சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடமிட்டுத் தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருள, பக்தர்கள் காவல் தெய்வமான கருப்பசாமி வேடத்தில் இசைக்கேற்ப ஆடுவதும், தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும் காணக் கண்கொள்ளாக் காட்சி.
Advertisement
திருக்கண் எழுந்தருளலும், தெருதோறும் அன்னதானமும் மனதையும் வயிறையும் நிறைவு செய்யும். இவ்விழாவைக் கொண்டாடும் மதுரை மக்களை வாழ்த்துவதோடு, நல்லமழை பெய்து நானிலம் சிறக்க நானும் வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.