மதுரையில் அழகர் தசாவதாரம்: விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
மதுரை : மதுரை அருகே அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரை ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. திரளான பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
கள்ளழகர் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 27}ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, மதுரை வைகையாற்றில் அழகர் எழுந்தருளிய வைபவம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதையடுத்து, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் அழகர் எழுந்தருளினார். சனிக்கிழமை மண்டூக மகரிஷிக்கு அழகர் சாபவிமோசனம் அளித்த ஐதீக விழா தேனூர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், தேனூர் மண்டபத்திலிருந்து புறப்பட்ட அழகர் திருக்கண் மண்டபங்களில் சேவை சாதித்து, ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை அழகரின் தசாவதார நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி, அழகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, முத்தங்கி சேவை, மச்சம், கூர்மம், வாமனம், ராமன், கிருஷ்ணன், மோகினி அவதாரங்களில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
பல்லக்கில் தடம் பார்த்தல் நிகழ்வு: இதன் பிறகு, ராமராயர் மண்டபத்திலிருந்து அழகர் ராஜாங்க திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி தல்லாகுளம் புறப்பட்டார். பின்னர், ஆழ்வார்புரம் வைகையாற்றில் எழுந்தருளி தடம் பார்த்தல் நிகழ்வு நடைபெற்றது. அங்கு அழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அங்கிருந்து புறப்பட்ட அழகர் இரவு 11 மணியளவில் தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடைபெற்ற திருமஞ்சனத்துக்குப் பிறகு, திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு கள்ளர் கோலம் பூண்டு பூப்பல்லக்கில் கள்ளழகராக அழகர் மலைக்குப் புறப்பட்டார்.
வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளும் அவர், அப்பன்திருப்பதி, கள்ளந்திரியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளுகிறார். பின்னர், செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணியளவில் அழகர் மலையை அடைகிறார். புதன்கிழமை உத்ஸவ சாந்தியுடன் இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவு பெறுகிறது.