தினம் ஒரு திருவாசகம்

பகுதி 28 – வாழாப் பத்து - 3

பண்ணிசையைப்போல் இனிமையாகப் பேசும் உமையம்மையைத் தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே,

என்.சொக்கன்

இவ்வுலகில் வாழவிரும்பாமல், சிவபெருமானின் திருவடிகளில் சேரவிரும்பும் தன்மையைக் குறிப்பிடும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

171

பாடலின்பம்

பண்ணின்நேர் மொழியாள் பங்க, நீஅல்லால்

பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,

திண்ணமே ஆண்டாய், சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

எண்ணமே உடல்,வாய்,மூக்கொடு செவி,கண்

என்றுஇவை நின்கணே வைத்து

மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்,

வருகஎன்று அருள்புரியாயே.

*

பஞ்சின்மெல்அடியாள் பங்க, நீஅல்லால்

பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,

செஞ்செவே ஆண்டாய், சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

அஞ்சினேன் நாயேன், ஆண்டுநீ அளித்த

அருளினை மருளினால் மறந்த

வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்,

வருகஎன்று அருள்புரியாயே.

பொருளின்பம்

பண்ணிசையைப்போல் இனிமையாகப் பேசும் உமையம்மையைத் தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, என்னை உறுதியுடன் ஆண்டவனே, சிவபுரத்து அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, உன்னைத் தவிர எனக்கு வேறு பற்று இல்லை, அதை நீ அறிவாய்,

என் எண்ணம், உடல், வாய், மூக்கு, காது, கண் என அனைத்தையும் உன்னிடம் வைத்துவிட்டேன், இதன்பிறகு நான் மண்ணில் வாழமாட்டேன், அது உனக்குத் தெரியும், சிவபெருமானே,  ‘வருக’  என்று என்னை உன்னிடம் அழைத்து அருள்செய்.

*

செம்பஞ்சுக்குழம்பு தடவிய மென்மையான திருவடிகளைக்கொண்ட உமையம்மையைத் தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, என்னை நன்கு ஆண்டவனே, சிவபுரத்து அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, உன்னைத் தவிர எனக்கு வேறு பற்று இல்லை, அதை நீ அறிவாய்,

நீ என்னை ஆட்கொண்டு அருள் செய்தாய், அந்த அருளை என் மயக்கத்தினாலே மறந்துவிட்டேன், நாய் போன்றவனான, வஞ்சகனான நான் அதை எண்ணி அஞ்சினேன், இனிமேல் நான் இங்கே வாழமாட்டேன், சிவபெருமானே,  ‘வருக’  என்று என்னை உன்னிடம் அழைத்து அருள் செய்.

சொல்லின்பம்

பண்: இசைப்பாடல்

நேர்: இணையான

திண்ணமே: திண்மையாக / உறுதியாக

உறை: வசிக்கிற / எழுந்தருளியிருக்கிற

செவி: காது

நின்கணே: உன்மீது

பஞ்சு: செம்பஞ்சுக்குழம்பு

செஞ்செவே: சிறப்பாக

மருள்: மயக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT