‘சிவத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் மதுரைக்கு உரியது. முதற்பாடலான ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’யைப் பெரிதும் நினைவுபடுத்துவது. ஆனால் சந்தத்தால் மாறுபட்டது. இப்பாடலில் மதுரை, ‘பத்மபுரி’ என்று குறிக்கப்படுகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று முதல் ஆறுவரையிலான அத்தனைச் சீர்களிலும் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக நான்கு எழுத்துகள் அமைந்துள்ளன.
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தனதான
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதரு எனவோதும்
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுர ரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி
பற்குனனை வெற்றிபெற ரதமூரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம் அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்த்ததென தெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை யெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள் புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரி பெருமாளே.