நம் கடவுள் நாமும் கடவுள் (மதத்துக்கு அப்பால்... விஞ்ஞானம் ஞானம் பற்றியது) - சு.கோபால்; பக். 110; ரூ.200; எஸ்.கோபால், பெங்களூரு-560 040; 98453 98978.
ஆன்மிகத்தைப் பற்றி பல நூல்கள் வெளி வந்தாலும், சில மட்டுமே வித்தியாசமான முறையில் உள்ளன. அப்படிப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று.
வேதங்கள், புராணங்கள், கோயில்கள், ஆகமவிதிகள், சடங்கு சம்பிரதாயங்களில் பல்வேறு வியக்கத்தக்க விஞ்ஞான தகவல்களை நூலாசிரியர் ஆதாரத்தோடு விளக்கியுள்ளார். கடவுள் யார், கணவன்-மனைவி-குழந்தைகள்- குடும்பம் ஏன்? என்பதற்கெல்லாம் விரிவான விளக்கங்கள் இந்த நூலில் உள்ளன.
இன்றைய விஞ்ஞானத்தையே அன்று முனிவர்கள் ஆன்மிகமாகச் சொல்லியிருக்கின்றனர் என்பது நூலில் விளக்கப்பட்டுள்ளது.
புராணங்களில் விஞ்ஞானம், பஞ்ச பூதங்களும் தோன்றிய விதமும், கடவுள்கள், வாழ்க்கை, கடவுளுடன் பேசுவது உள்பட 11 தலைப்புகளில் நூலில் பல்வேறு அரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
பஞ்ச பூதங்களில் அடங்கியது நம் உடல் என்றும், அவற்றை விளக்கிய முறையும் சுருக்கமாக, எளிதில் புரியும் வகையில் இருக்கிறது.
ஈஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி என்று பெண் கடவுள்கள், அர்த்தநாரீஸ்வரர், பூமியும் நவக்கிரகங்களும் குறித்த விளக்கங்கள் வியக்க வைக்கின்றன.
கேள்வி கேட்ட தனது குழந்தைகளுக்காக எழுதிய இந்த நூல், இன்றைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தில் படைத்திருப்பதாக நூலாசிரியர் தெரிவித்துள்ளது சிந்திக்க வைக்கிறது. ஆன்மிக ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத நூல்.