பாடல் 6:
விண்ணவர்கள் வெற்பரசு பெற்ற மகள் மெய்த்தேன்
பண் அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே
விளக்கம்:
மன்மதன் பெருமானின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சி, தேவர்களின் தூண்டுதலால் ஏற்பட்டது என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமானின் எண்ணத்திற்கு மாறாக எவரும் ஏதும் செய்ய இயலாது என்பதை உணர்த்தும் பாடல் இது. காலும்=உமிழும்
பொழிப்புரை:
மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் இமவான் பெற்ற மகளை, தேனும் பண்ணும் சென்று அமர்ந்தது போன்று இனிய மொழிகளை உடைய பார்வதி தேவியை, இறைவனுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தேவர்களின் தூண்டுதலால் முன்வந்து, தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடல் வெந்து அழியும் வண்ணம் திறந்த நெற்றிக் கண்ணினை உடையவனாகிய பெருமான் உறையும் இடம் திருக்கருப்பறியலூர் ஆகும்.