தினம் ஒரு தேவாரம்

142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 4

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 4:

    வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள்
    ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச் சங்கை
    கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும்
    மாடம் சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

தனது அடியார்களுக்கு அருளும் பொருட்டு, அந்தந்த நிலைக்கு ஏற்ற வண்ணம், பல விதமான வேடங்களை எடுப்பவர் பெருமான். வேடனாக வந்து அர்ஜுனனுடன் போரிட்டு அவனுக்கு பெருமான் பாசுபதம் அருளிய நிகழ்ச்சி பல தேவாரப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. தனது அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் அந்தணனாக பைரவனாக முதியவராக பெருமான் வந்ததை நாம் பெரிய புராணத்தில் பல அடியார்களின் சரித்திரத்தில் காண்கின்றோம். நடக்கவிருந்த திருமணத்தினை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஓலை கொண்டு வந்த முதியவராகவும், திருவதிகை சித்த மடத்தில் தனது காலினை சுந்தரரின் முகத்தில் இருமுறை படுமாறு வைத்து திருவடி தீட்சை அருளிய முதியவராகவும், குருகாவூர் செல்லும் வழியில் தயிர் சாதமும் குடிநீரும் வைத்துக் கொண்டு காத்திருந்த முதியவராகவும், திருமுதுகுன்றம் செல்லவிருந்த சுந்தரரை தடுத்து கூடலையாற்றூர் அழைத்துச் சென்ற முதியவராகவும், திருக்கச்சூர் தலத்தில் உள்ள பல இல்லங்களில் நடுப்பகலில் சென்று இரந்து அமுது கொண்டு வந்து ஈந்த அந்தணராகவும் பெருமான் காட்சியளித்த போதும், அவ்வாறு வந்து அருள் புரிந்தவர் பெருமான் தான் என்பதை சுந்தரர் முதலில் உணரவில்லை. திருப்பைஞ்ஞீலி சென்று கொண்டிருந்த அப்பர் பிரானுக்கு பொதி சோறு அளிக்கும் பொருட்டு அந்தணராக வந்தவரும் பெருமான் தானே. இந்த தன்மையே பெருமானின் கொள்கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது.

ஓடம்=வளைந்து காணப்படும் ஒற்றை பிறைச் சந்திரன் ஓடம் போன்று இருப்பதால், கங்கை நதியில் ஓடும் ஓடம் என்று பிறைச் சந்திரனை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருஞான சம்பந்தருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளித்த தலைச்சங்கை மக்கள், வீடுகளையும் தெருக்களையும் மிகவும் அழகாக அலங்கரித்தனர் என்பதை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடும் பாடலை நாம் முன்னர் கண்டோம். அந்த அழகினைத் தான் சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. குலாய=பொருந்திய;    

பொழிப்புரை:

மிகுந்த விருப்பத்துடன் தானே பல வேடங்கள் தரித்து அடியார்களை நெருங்கி அவர்களுக்கு அருள் புரிவதை தனது கொள்கையாக கொண்டவரே, ஓடம் போன்று காட்சி அளிக்கும் நீண்ட ஒற்றை பிறைச் சந்திரனை, கங்கை நதியுடன் தனது தலையின் உச்சியில் வைத்தவரே, கூடம் மண்டபம் வீடுகளின் மாடங்கள் முதலியன அழகாக விளங்கும் கொடிகளுடன் காணப்படும் தலைச்சங்கை தலத்தில் உள்ள திருக்கோயிலை உமது இருப்பிடமாக நீர் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT