பாடல் 5:
பாரு நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்திழி செழும்புனல் கோட்டாறு
வாரும் தண்புனல் சூழ்ச் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே
விளக்கம்:
பார்=மண், உலகம்; இரவி=சூரியன்; பனி மதி=குளிர்ந்த சந்திரன்; ஓர்தல்=உணர்தல்; ஓரும் வாயு=தோடு உணர்வினால் அறியப்படும் காற்று; ஒண்கனல்=ஒளி வீசும் நெருப்பு; கோட்டாறு=வளைந்து செல்லும் நதி;
பொழிப்புரை:
நிலம், நீர், ஒளி வீசும் பல கதிர்களை உடைய சூரியன், குளிர்ந்த சந்திரன், ஆகாயம், தொடு உணர்வினால் அறியப்படும் காற்று, பிழம்பாக ஒளிவீசும் நெருப்பு, வேள்வித்தலைவன் என்றும் இயமானன் என்றும் அழைக்கப்படும் ஆன்மா, ஆகிய எட்டு உருவங்களாக விளங்கும் பெருமான், சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் உறைகின்றார். சந்தனம் மற்றும் அகில் மரங்களின் துண்டுகளுடன் வந்து வேகமாக பாய்ந்து வருவதும் செழித்த நீர்வளம் உடையதும் வளைந்து பாயும் தன்மை உடையதும் ஆகிய காவிரியின் குளிர்ந்த நீரினால் சூழப்பட்ட சிறப்புற நகரத்தில் உறையும் பெருமானைத் தொழும் அடியார்கள், வருத்தம் தரும் வினைகள் நீங்கப்பெற்று வருத்தம் ஏதுமின்றி வாழ்வார்கள்.