வில்வித்தையில் பள்ளி மாணவர் சாதனை: ஐரோப்பிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் தடைக் கல்லாக இருக்கும் குடும்பச் சூழல்
ஐரோப்பிய வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றபோதும், குடும்பச் சூழல் காரணமாக அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார் 13 வயது பள்ளி மாணவர் கார்த்திகேயன்.
ஐரோப்பிய வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றபோதும், குடும்பச் சூழல் காரணமாக அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார் 13 வயது பள்ளி மாணவர் கார்த்திகேயன்.
தனது 11-ஆவது வயதில் இருந்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 10 தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று, பள்ளியில் பிற மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருவதாக அவருடைய பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
சேலம் மாவட்டம் வனவாசியில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார் கார்த்திகேயன். மேட்டூர் அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் இவருடைய மூத்த சகோதரர் மதன்தான் இவருக்கு பயிற்சியாளர்.
Advertisement
கடந்த 10 ஆண்டுகளாக வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்று வரும் மதன் தேசிய அளவில் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் ஏராளமான பதக்கங்களையும் வென்றுள்ளார்.
சகோதரரைப் பார்த்து, கார்த்திகேயனுக்கும் வில்வித்தைப் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டதாம். தேசிய அளவில் பதக்கங்களை வென்று குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறுபவர்கள் மட்டுமே, இத்தாலியில் சான் மரியான் என்ற இடத்தில் நடைபெறும் ஐரோப்பிய தேசிய உள் அரங்கு வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர். அதில் பங்கேற்று பதக்கத்தை வெல்லும்போது, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தொடர் வாய்ப்புகளைப் பெற முடியும்.
சகோதரர்கள் இருவரும் ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை தொடர்ந்து பெற்ற வருகிறபோதும், குடும்பச் சூழல் தடைக்கல்லாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சேலத்தில் கையேந்தி பவன் நடத்திவரும் தந்தைக்கு, மாத வருமானம் ரூ. 3,600 என்ற அளவில்தான் கிடைக்கிறது. எனவே, சாதிக்கத் துடிக்கும் எங்களுக்கு அரசோ அல்லது தன்னார்வ அமைப்புகளோ உதவ முன்வந்தால், உறுதியாக சர்வதேச போட்டிகளிலும் சாதிப்போம் என்கின்றனர் அவர்கள்.
இதுகுறித்து மதன் அளித்த பேட்டி:
மேட்டூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்துக் கொண்டே, வில்வித்தைப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறேன். ஐரோப்பிய போட்டியில் பங்கேற்க பல முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதும், போதிய நிதி இல்லாததால், அங்கு செல்ல முடியாமல் போனது. இப்போது, எனது தம்பிக்கும் ஐரோப்பிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கான இப் போட்டி, அக்டோபர் 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது.
அங்கு அனுப்புவதற்கு, எனது தம்பி படித்து வரும் ஈஷா வித்யா பள்ளி சார்பிலும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், அப் போட்டியில் பங்கேற்க மிக அதிக நிதி தேவைப்படும். உள்நாட்டில் பயன்படுத்தப்படும் சாதாரண கருவிகளோடு, ஐரோப்பிய போட்டியில் பங்கேற்க இயலாது. ரூ. 34 ஆயிரத்துக்கும் அதிகமான விலையுடைய தரமிக்க கருவிகளுடனே அங்கு பங்கேற்க முடியும்.
அதோடு, பயணச் செலவு உள்ளிட்ட பிற செலவுகளோடு சேர்த்து ரூ. 1.5 லட்சம் வரைத் தேவைப்படும். இதனாலேயே, வாய்ப்புகள் பல கிடைத்தும் அவற்றை எட்ட முடியாமல் தவித்து வருகிறோம். உதவ விரும்புபவர்கள் பள்ளியையோ, 9087498433 என்ற செல்பேசியிலோ தொடர்புகொள்ளலாம் என்றார்.