பதக்கம் வெல்வதே இலக்கு
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு என கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நடைப் போட்டி வீரர் கே.கணபதி தெரிவித்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு என கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நடைப் போட்டி வீரர் கே.கணபதி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோனேகவுண்டனூரைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் - மாது தம்பதியின் 2-ஆவது மகன் கணபதி. இவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் களமிறங்குகிறார்.
இதுகுறித்து, அவர் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தது: சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தேன். கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த பிறகும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வந்தேன்.
Advertisement
2010-இல் எனது திறமையை அடையாளம் கண்டுகொண்ட இந்திய பயிற்சியாளர்கள், நடைப் போட்டியில் பயிற்சி அளித்தனர். பயிற்சியாளர் ராம்குமார் எனக்கு பயிற்சி அளித்தார். இதன்மூலம் பல நாடுகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன்.
3 ஆண்டுகளுக்கு முன்பே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்தேன். அதன்படி, இந்த ஆண்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நடைப் போட்டியில் 1 மணி, 21 நிமிடம், 52 விநாடியில் இலக்கை எட்டினேன். இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற உலக நடைப் போட்டியில் 1 மணி, 21 நிமிடம், 41 விநாடியில் இலக்கை எட்டியதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றேன்.
போலந்து நாட்டில் பயிற்சி: கடந்த 3 மாதங்களாக போலந்தில் உள்ள ஸ்பாலா ஒலிம்பிக் பயிற்சி மையத்தில் இந்திய அணியைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் மற்றும் 3 வீரர்களுடன் பயிற்சி பெற்று வருகிறேன். ரஷிய நாட்டு பயிற்சியாளரான அலெக்ஸாண்டர் பயிற்சி அளித்து வருகிறார். தினமும் மூன்று முறை தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது எனது இலக்காக இருந்தாலும், தற்போது பதக்கம் வென்று நாட்டுக்கும், எனது கிராமத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என விருப்பம் என்றார்.
தாய் பெருமிதம்: கணபதியின் தாய் மாது கூறுகையில், "ஒலிம்பிக் போட்டியில் எனது மகன் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மகன் இரண்டு நாள் விடுமுறையில் கிராமத்துக்கு வருவார். அப்போதும்கூட தனது நண்பர்களின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ரியோ ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வெல்வதற்காக எனது குடும்பத்தினர் அனைவரும் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.