டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (மே 12) அறிவித்துள்ளார். அண்மையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது விராட் கோலியும் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலியின் எதிர்கால பயணத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டிருப்பதாவது: உங்களது கிரிக்கெட் பயணம் எண்ணற்ற இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இளைஞர்கள் பலரும் கிரிக்கெட்டினை ஆர்வமாக விளையாடி வருகின்றனர். உங்களது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் நம்பமுடியாத விதமாக இருக்கிறது.
ரன்களையும் தாண்டி இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் மிகவும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள். கிரிக்கெட்டுக்கு அதிக அளவிலான தீவிரமான ரசிகர்களையும், புதிய வீரர்களையும் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். உங்களது சிறப்பான டெஸ்ட் கிரிக்கெட் பயணத்துக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 9,230 ரன்கள் குவித்துள்ளார். அதில் 30 சதங்கள் அடங்கும். அவரது சராசரி 46.85 ஆக உள்ளது.
இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 15, 921 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.