ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?
நடப்பு ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் ரன்கள் குவிக்கத் தடுமாறுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் ரன்கள் குவிக்கத் தடுமாறுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறவில்லை. நான்கு போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. புள்ளிப்பட்டியலிலும் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேமரூன் கிரீன் ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். முதலில் சில போட்டிகளில் பந்துவீசாத அவர், அதன் பின் பந்துவீச்சில் ஈடுபட்டார். பந்துவீச்சிலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுவரை விளையாடி 5 போட்டிகளிலும் 18(10), 2(2), 4(2), 32 (24) மற்றும் 0(1) ரன்கள் எடுத்தார்.
Advertisement
இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதால் மட்டுமே அவர்களை அணியில் சேர்க்கக் கூடாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கேமரூன் கிரீன், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் நூர் அமகதின் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார். சேஸிங்கின்போது, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலாக இருக்கும்.
கேமரூன் கிரீனுக்கு ஏலத்தில் அதிக தொகை செலவிட்டு எடுத்துள்ளோம் என்பதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை விளையாடவைப்பதாக நினைக்கவில்லை. அப்படி செய்தால் அது அணியின் அறியாமையாக இருக்கும். வீரர்கள் அவர்களது திறமையை அடிப்படையாக வைத்து ஏலத்தில் வாங்கப்படுகிறார்கள். இந்த வீரருக்கு அதிக தொகை செலவிட்டுள்ளோம் அதனால் இவர் விளையாடியாக வேண்டும் என்று அர்த்தமில்லை. கேமரூன் கிரீன் அவர் வழக்கமாக விளையாடும் இடத்தில் விளையாடாமல் வேறு இடத்தில் விளையாடுகிறார். அவர் டாப் ஆர்டரில் விளையாடும்போது நன்றாக ரன்கள் குவித்துள்ளார் என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கேமரூன் கிரீன் 6-வது வீரராக களமிறங்கி நூர் அகமது பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனது குறிப்பிடத்தக்கது.