தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!
டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான் அலி அகாவைப் பற்றி...
பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் சல்மான் அலி அகா, டி20 கிரிக்கெட்டில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்ள ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக, டி20 போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வது குறித்து பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன் சல்மான் அலி அகா ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisement
2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட இடங்களில் அக்டோபர் மற்றும் நவம்பரில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுகிறது. மேலும், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடைபெறுகிறது. இதனை மையப்படுத்தி சிறிதுகாலம் இடைவெளி எடுத்துக் கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சல்மான் அலி அகா கூறுகையில், “உலகக் கோப்பை இன்னும் நீண்ட நாள்கள் இருக்கின்றன. ஆனால், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது குறித்து சிந்திக்க வேண்டும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக டி20-களிலிருந்து ஓய்வெடுக்க விரும்புகிறேன்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நன்றாக விளையாடும் இளம் வீரர்களைத் தேசிய அணிக்குத் தேர்வு செய்து விளையாட வைக்க வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படும் வீரர்கள் தேசிய அணியில் சோபிக்காமல் போவதையும் பார்க்க முடிகிறது” என்றார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சல்மானின் தலைமையில் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது. அணியில் சாஹித்சதா, அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக் உள்ளிட்ட சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சரியாக அணி அமையாததால், தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால், டி20 அணியின் கேப்டன் பதவி குறித்த சந்தேகங்களும் எழுந்திருக்கின்றன. அதேநேரம், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய சல்மான், 106, 64, 5 ரன்கள் எடுத்திருந்து குறிப்பிடத்தக்கது.