மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
ஐபிஎல் தொடரில் அசத்தும் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஷ் குறித்து...
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஷ் ஐயர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
நேற்று வான்கடேவில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16.3 ஓவர்களில் 198/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஸ்ரேயாஷ் ஐயர் ஹார்திக் பாண்டியா அடித்த பந்தை எல்லைக் கோட்டில் லாவகமாகப் பிடித்து ஜேவியர் பிராலெட்டிடம் வீசுவார். அவரும் பந்தைப் பிடிக்க, சிறப்பான விக்கெட்டாக அமைந்தது.
Advertisement
கேப்டன்சி என்று வரும்போது பகுதிநேர பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தினார். குறிப்பாக ஷஷாங் சிங்கிற்கு ஓவர் அளிப்பது மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அவரது இந்த யோசனை நடப்பு ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய முடிவாக இருக்குமென விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் போட்டியிலும் ஷஷாங் சிங் பந்துவீசி விக்கெட் எடுத்தார். பேட்டிங்கில் ஸ்ரேயாஷ் 66 ரன்கள் குவித்து அசத்தினார். இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியே காணாத கேப்டனாக ஸ்ரேயாஷ் இருந்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா அணியை கோப்பை வெல்ல வைத்தார்.
தில்லி அணியை வழிநடத்தும்போதும் முன்னேற்றத்தைக் கொடுத்த ஸ்ரேயாஸுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது. இந்திய அணிக்கே கேப்டனாகும் வாய்ப்பு இருந்தும் மறுக்கப்படுவது இந்திய ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது.